Tuesday, March 22, 2016

கொண்டாடப்படாத காதல்




உந்தன் முகம் காண
பொழுதெலாம் உளந்தனில்
ஏக்கம் ! - எண்ணமெலாம்
உன் நினைவலைகளின்
தாக்கம் ! - என்ன மாயமிதோ ?
சலனமற்றுக்  கிடக்கும்
குளம்  போலத்தான்
அமைதியாய் இருந்தது மனம் !
உந்தன் சிறுகீற்றுப் புன்னகையும்
அதில் வழிந்தோடிய
அன்பும் அக்கறையும்
தெளிவான மனமதில்
சற்றே கல்லெறிந்து பார்க்க
குபுக்கென உள்ளந்தனில்
கொப்பளித்தது காதல் !
பொங்கிய காதலை
பொங்காது பொறுமையாய்
கடிதத்தில் பொக்கிஷமாய்
பொத்திக் கொடுத்தது
உனக்கு விளங்கவில்லையோ ?
காகிதத்தை கசக்கி எறிவதாய்  எண்ணி
என் மனதை தூக்கி எறிந்து
காயப்படுத்தி விட்டாய் !
ஏனைய உலகம் முழுதும்
இரு பகலென மாறி மாறி
சுழன்று கொண்டிருக்க
என் உலகு மட்டும் - உந்தன்
நினைவுகளுடனும் உனக்காக  என்
இதயமெங்கும் வழிந்தோடும்
காதல் கனவுகளோடும் மட்டுமே !
கனவில் களிப்பூட்டிய காதல்
நிஜத்திலும் என் உலகை
வண்ண மயமாக்கி - மகிழ்ச்சியில்
எனை திக்குமுக்காட செய்யுமென
எண்ணி காத்துக் கிடக்க
எனை கொண்டாட்டத்தில் - களிப்பின்
உச்சத்தில் ஏற்றி வைத்த காதல்
என் உள்ளத்துதித்த ஆசைக் காதல்
கொண்டாடப் படாத காதலாய் - உள்ளத்தின்
அடியாழத்தில் அமைதியாய் உறங்குகிறது !

4 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...