Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Friday, August 16, 2019

பொம்மை



கிள்ளைகளின் கரங்களால்
உயிரும் உணர்வும்
ஊட்டி ஊட்டி உருவாகிறது -
வீட்டில் புதியதோர் உறவு !
உண்ண உறங்க குளிக்க
என அனைத்து செயல்களுக்கும்
துணையாய் - புன்னகை மாறா
அழகுடன் ஐக்கியமாகிறார்கள் !
சிலபல சமயங்களில் 
கிள்ளைகட்கே கிள்ளைகளாகி
அவர்தம் மழலை மொழிக் கொஞ்சல்களால்
நம்மையும் ஏங்கத்தான் வைக்கிறார்கள்!
துள்ளும் கிள்ளைகளின் அள்ளும் அழகினை
முடக்கி விட்டனவோ - மின்னணு சாதனங்கள் ?
இல்லத்தை உயிர்ப்புடன் இயக்க
மீண்டும் மீட்டு வருவோம் - அழகு பொம்மைகளை !

பிரதிலிபி நடத்தும் இரண்டு போட்டிகளில் எனது படைப்புகள்

நட்பே துணை எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/நட்பு-என்பது-யாதெனில்-ahL7nMMHZyw7

பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/இயற்கை-பால-குகைகள்-RCqeiU48AcEC

நண்பர்கள் வாசித்து, உங்களது மேலான கருத்துக்களை வழங்குங்கள். நன்றி.


Wednesday, August 7, 2019

வர்ணஜாலம்



வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும்
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில்
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

Thursday, August 1, 2019

கருப்பு



வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
 
 
இவ்வார  தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Thursday, July 11, 2019

இனிமேல் மழைக்காலம்





துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !


நன்றி, தினமணி - கவிதைமணி

Tuesday, June 18, 2019

கனமான கணங்கள்


பல கனமான கணங்களை
மெல்லிய புன்னகை
முலாம் பூசியே கடக்கிறேன் !
புன்னகை முலாமும் உதிர்ந்து
மெளனக் கவசம் பூட்டி
வாயடைத்து நிற்கிறேன் எனில்
வார்த்தை கீறல் உண்டாக்கிய
இரணமும் - உறைந்த
இரத்தத்தின் பின்னிருக்கும் வலியும்
சொல்லம்பு வீசிச் சென்ற
வாய்ச்சொல் வீரர்களுக்கு
புரிய வாய்ப்பொன்று
வாய்க்காதும் போய்விடுமோ ? என
உள்ளத்து எண்ணங்களோடு
சச்சரவு செய்தபடியே தானிருக்கிறேன்!

நன்றி, முத்துக்கமலம் .

Friday, June 7, 2019

கோடை விடுமுறை

பரீட்சைகள் முடிந்தன
பயமெல்லாம் தீர்ந்தன !
ஒய்வெடுக்கும் காலமிது -

கிள்ளைகளின் மூளைகளுக்கே !
துறுதுறுவென துள்ளியோட நேரமிது
சின்னஞ்சிறு கால்களுக்கே !

தன் பணியை சூரியன்
செவ்வனே செய்ய -
குளிர்விக்க பல்வகை கனிகளும்
இயற்கையின் கொடையாய் !
தாகம் தீர்க்க தண்ணீரை விட
சிறந்ததொன்று வேறெதுவுமில்லை !
குளிர்பானங்களை ஒதுக்கி வைப்போம் -
நமக்கேன் வீண் தொல்லை ?

சுட்டெரிக்கும் சூரியனை
திட்டித் தீர்ப்பதை விடுத்து
முதற் கடமையாய்
மரம் வைத்து காத்திடுவோம் -
அடுத்த கோடையிலேனும்
அதன் மடியில் இளைப்பாறிடுவோம் !

இயற்கையை பகைத்துக் கொள்வதை விட்டு
இயற்கையோடு கைகோர்த்து
காலநிலை சீராக்குவோம் !
இயற்கையோடு இயைந்த வாழ்வால்
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இம்மண்ணில் நம் வாழ்வினையே !
Related Posts Plugin for WordPress, Blogger...