Showing posts with label dinamani - kavithai mani. Show all posts
Showing posts with label dinamani - kavithai mani. Show all posts

Sunday, October 13, 2019

சாம்பலாய் முடியும் உடல்



உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் ! 

Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Friday, August 16, 2019

பொம்மை



கிள்ளைகளின் கரங்களால்
உயிரும் உணர்வும்
ஊட்டி ஊட்டி உருவாகிறது -
வீட்டில் புதியதோர் உறவு !
உண்ண உறங்க குளிக்க
என அனைத்து செயல்களுக்கும்
துணையாய் - புன்னகை மாறா
அழகுடன் ஐக்கியமாகிறார்கள் !
சிலபல சமயங்களில் 
கிள்ளைகட்கே கிள்ளைகளாகி
அவர்தம் மழலை மொழிக் கொஞ்சல்களால்
நம்மையும் ஏங்கத்தான் வைக்கிறார்கள்!
துள்ளும் கிள்ளைகளின் அள்ளும் அழகினை
முடக்கி விட்டனவோ - மின்னணு சாதனங்கள் ?
இல்லத்தை உயிர்ப்புடன் இயக்க
மீண்டும் மீட்டு வருவோம் - அழகு பொம்மைகளை !

பிரதிலிபி நடத்தும் இரண்டு போட்டிகளில் எனது படைப்புகள்

நட்பே துணை எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/நட்பு-என்பது-யாதெனில்-ahL7nMMHZyw7

பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/இயற்கை-பால-குகைகள்-RCqeiU48AcEC

நண்பர்கள் வாசித்து, உங்களது மேலான கருத்துக்களை வழங்குங்கள். நன்றி.


Wednesday, August 7, 2019

வர்ணஜாலம்



வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும்
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில்
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

Thursday, August 1, 2019

கருப்பு



வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
 
 
இவ்வார  தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Thursday, July 11, 2019

இனிமேல் மழைக்காலம்





துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !


நன்றி, தினமணி - கவிதைமணி

Wednesday, May 15, 2019

முதல் முத்தம்







இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Wednesday, March 20, 2019

நிலாக்கால நினைவுகள் !






செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

இவ்வார தினமணி கவிதை மணி பகுதியில் வெளியானது.

Friday, March 1, 2019

தாமரை




தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !



இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Sunday, January 20, 2019

உன் விழிகளில் ....



உன் விழிகளில் படர்ந்திருக்கும்
ஈரத்தின் காரணம் - காரியத்திற்காய் !
இப்படியே பழகிப்போன  - மனத்தில்
ஊறிப்போன எண்ணங்களின் பிம்பங்கள்
சாட்டையடியாய் உள்ளத்தில்
சுரீரென்று விழும் வேளையில்
நம் உறுதியை குலைக்கலாம் !
உள்ளத்தை சுக்கல் சுக்கலாய் உடைக்கலாம் !
வாதம் போல் செயலிழக்க செய்யும்
வார்த்தை அம்புகளை
திடமான மனமெனும் கேடயம் கொண்டு
எதிர்கொள்வோம் !
வாழும் வாழ்வு நலமாகட்டும் !
வசந்தம் நம் வசமாகட்டும் !


இக்கவிதை   இவ்வாரம் தினமணி கவிதைமணி பகுதியில் வெளியானது.

Monday, January 25, 2016

தொலைந்து போன கடிதம்



சொல்ல மறந்த கதைகளையும்
கண்ணோடு கண் நோக்கி
சொல்லிச் சென்ற காதலையும்
விரிவாய் விளக்கமாய்
உள்ளக்கிடக்கையின்  பிம்பமென
வெளிச்சமிட்டுக் காட்டிய கடிதம் !
அன்பு ..... நட்பு ..... காதல் .....
உறவு ..... கல்வி .... விண்ணப்பம் ....
வேலைவாய்ப்பு.... உத்தியோகம்.....
பதவி உயர்வு .... என பலவும்.....
மனித வாழ்வின் நல்லன கெட்டன -
அனைத்தும் சொன்ன கடிதம் !
அன்பிற்கு உருக்கொடுக்கும்
கையெழுத்தில் உருவான கடிதம்
எழுத்துக்களில் சுமந்து வருமே
உயிரையும் உணர்வையும் உயிர்ப்புடனே !
இருபக்க அஞ்சல் அட்டையும் - நான்கு பக்க
அஞ்சல் கடதாசியும் கொண்டிருக்கும்
வழிய வழிய அன்புகளையும் ஆசிகளையும்
பொக்கிஷமாய் நம்மிடம் சேர்த்திடவே !
இன்றோ .... நாம் தொலைத்து விட்டோம்
கடிதங்களை மின்னஞ்சலிலும்
வாழ்த்து அட்டைகளை குறுஞ்செய்திகளிலும் !
தொலைந்தது கடிதங்கள் மட்டுமல்ல ......
உள்ளங்களுக்கு இடையேயான
தன்னலமில்லா அன்பும் அக்கறையும் கூட !

தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை. 
 

Monday, December 28, 2015

புதியதோர் உலகு செய்தோம்







 முகம் பார்த்துப் பேச வேண்டிய நேரமெலாம்
முகப் புத்தகம் பார்த்தே கரைந்தோடியது !
கையெழுத்தில் அன்பை சுமந்து வந்த கடிதம்
வகை வகையாய் எழுத்துரு சுமந்து
மின்னஞ்சலாய் அடைவில் நிறைந்து கிடக்க
திறந்து பார்க்கக் கூட நேரமில்லாது போக
சமயங்களில் குப்பை அடைவில்
சென்று அடைக்கலமாகிறது !
ஓடி ஓடி எதையோ தேடுகிறோம்
எதை என்று தெரியாமலே !
நிஜ உலகில் வாழும் பொழுதைவிட
நிழல் உலகில் உலவும் பொழுதுகளே
அதிகமாகிப் போனது !
கூடி வாழ்தல் தான் உலகென்பதை உணர்ந்தும்
ஒவ்வொருவரும் நமக்கென தனி உலகை
கணினிகளில் சிருஷ்டித்து - புதியதோர் உலகு செய்து
உலவுகிறோம் இலக்கேதும் இல்லாமலே !

அடைவு - folder
குப்பை அடைவு - trash folder

கணிப்பொறி மயமான இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிப் போன தொழில்நுட்ப வளர்சி குறித்த கவிதை. 

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/2015/12/28/புதியதோர் உலகு செய்தோம்/article3199968.ece 

Friday, December 25, 2015

சுடும் நினைவுகள்




மூடிய விழியின் வழியே
நீராவியென கசியும்
கண்ணீர் ! - அது
உள்ளமதில் அலைமோதி
கொதித்துக் கொண்டிருக்கும்
 நினைவுகளின்று - தெறித்து விழுந்த
துளிகள் !
சமயங்களில் -
கொதிக்கும் நினைவுகளை
 ஆற்றும் களிம்பாகவும்
மாறிப் போகிறது - கண்ணீர் !
சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
பொ று த் திரு ந் தா லும்
அவை விட்டுச் செல்வது என்னவோ
வலிகளும் வடுக்களுமே !

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

www.dinamani.com/kavithaimani/2015/12/21/சுடும்-நினைவுகள்-பி.தமிழ்-மு/article3187564.ece

Monday, December 14, 2015

மனித நேயம்




கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
இதயத்திற்கும் பூட்டிட்டு
சாவியைத் தொலைத்து விட்டவராய்
ஊரெங்கும் தேடி அலைகிறார்
மாந்தர் - மனித நேயம் தனை !
கண்களில் கருணையும்
வார்த்தைகளில் கனிவும்
இதழ்களில் புன்னகையும்
துடிக்கும் இதயம் தனில்
தன்னலம் மறந்த கருணையும்
தனக்கென வருகையில்
கையேந்தலை விடுத்து
இயன்ற தருணமெலாம்
கைகொடுத்து வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் அகிலமெலாம்
மனித நேயம் !

 தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/

Tuesday, December 8, 2015

யாசகம்





வாரிக் கொடுத்து வாழ வைக்க
இளமையெலாம் தெம்பும் துட்டும்
நிறைந்திருந்தும் - செருக்கு
தலைக்கேறி நின்றதால்
உதவும் எண்ணமுள்ள
மனம் இல்லை !

வயோதிகம் உடலை முடக்கி விட
உறவுகளும் ஒதுங்கியோடி மறைந்துவிட
வயிற்றுப் பசி நிரந்தரமாய் துணையாகிட
பசி வந்ததும் அனைத்தும் பறந்தோட
மனம் புழுங்கினாலும் வழியில்லாது
கை கேட்கிறது யாசகம் !


தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

தினமணி - கவிதைமணி 

Monday, November 30, 2015

சூன்யமாக்கிடும் மது !



சிந்தையை சிறைப்படுத்தி
தன்னிலை மறக்கடித்து
மதிப்பையும் தானழித்து
எண்ணம் - வண்ணம் எல்லாம்
குழம்பிப் போய் - பேசும்
வார்த்தைகளும் நிலை தடுமாற
நடையிலும் தள்ளாட்டம் சேர்ந்திட
சுற்றம் சூழ்நிலை மறந்த நிலையில்
ஊர் உலகுக்கு காட்சிப்  பொருளாக்கி
தன்மானத்திற்கும் மரியாதைக்கும்
தானே இட்டுக் கொண்ட கொள்ளியாய்
சுட்டெரித்து சூன்யமாக்கிடும் - மது !

 தினமணி கவிதைமணி பகுதியில் அக்டோபர் 19ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
http://www.dinamani.com/kavithaimani
Related Posts Plugin for WordPress, Blogger...