Showing posts with label க்ரிஷ். Show all posts
Showing posts with label க்ரிஷ். Show all posts

Wednesday, May 7, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 6



காணும் புத்தகமெலாம் 
உன் அறிவுப் பசிக்கு 
அமுதூட்டும் அட்சய 
கலயமானதே !


நீ எழுதுகோல் பற்றி 
எழுதிய கோட்டுச் 
சித்திரமெலாம் எமக்கு 
பொக்கிஷமானதே !


குளிர்சாதன பெட்டி கணினி 
வீட்டுச் சுவர் - தொலைக்காட்சி 
அனைத்திலும் உன் 
எழிலார்ந்த கைவண்ணங்களே !


நீ செய்யும் சிறு சிறு 
உதவிகளில் எலாம் 
சொக்கிப் போய்  தான் 
நிற்கின்றேனே !


செய்யும் நற்காரியத்திற்கு 
கைத்தட்டலுடன் ஊக்கம் கேட்கும் 
உன் அழகு குணம்  தனை 
மெச்சுகிறேன் !


 உறங்கையில் நீ உதிர்க்கும் 
சிறு முறுவல் கண்டால் -
கண்ணிமையாது தான் 
காண  விழைகிறேன் !


என் கண்ணே உன் மீது 
பட்டுவிடுமோ என்று 
சடாரென 
திரும்பிக் கொள்கிறேன் !


என் மனநிலை அறிய 
முகத்தையும் கண்களையும் 
உற்று நீ நோக்குகையில் 
எனை மறந்து சிரிக்கின்றேன் !


உன் புன்னகையில் 
உலகையே  மறந்து நிற்கின்றேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு 
உன்னிலேயே என்னைத் தேடுகிறேன் !


என் கண்ணான கனியமுதே !!!



பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4
பிள்ளைக் கனியமுதே ! - 5

Friday, April 25, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 5


கண்ணாடி  தனைப்  பார்த்து 
நீ  சிரிக்க  - உனைப்  பார்த்து 
நான்   இரசிக்க   - எனைக்  கண்டதும் 
கையை  நீட்டியபடியே 
அழகுப் புன்னகை உதிர்க்கிறாயே !


கண்ணாடி  பிம்பம்  தனையே 
உனைப்  போல் மற்றோர் 
கிள்ளையெனக்  கருதி  - மெல்ல 
கண்ணாடியை  முன்னும்  பின்னும் 
திருப்பித்  தான்  பார்க்கிறாயே  !


கலைத்துப்   போட்டு  விளையாடிய 
செப்பை  எல்லாம்  -  நீ 
களைத்து  உறங்கியதும்  ஒழுங்காக்க 
எழுந்ததும்  முதல்  வேலையாய் 
கலைத்து  தான்  விடுகிறாயே !


காலை  எழுந்ததும்  என் 
முகம்  தேடும்  - உன்  ஆவல் 
விழிதனைக்   காணவே 
நீயே  உறக்கம்  கலைந்து 
எழும் வரை  காத்திருக்கிறேன்  !


உன்  ஒவ்வோர்  அசைவிலும்  தான் 
தளர்விலா முயற்சியை 
கண்டு  மகிழ்கிறேனே !
நீயே  எந்தன்  வாழ்வின் 
ஒளியாக   ஆனாயே !


என்   பிள்ளைக்  கனியமுதே !

  

பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4


Tuesday, April 15, 2014

பிள்ளைக் கனியமுதே - 4



நீ  செய்யும் சிறுசிறு
உதவிகளில் எல்லாம்
சொக்கிப் போய் தான்
நிற்கிறேன் !

நற்காரியத்திற்கு கைதட்டலுடன்
ஊக்கம்   சேர்க்கும் உன்
அழகு  குணம் தனை
மெச்சுகிறேன் !

உறங்கும் போது நீ
உதிர்க்கும் சிறு முறுவலை
கண் இமையாது தான்
காண விழைகிறேன் !

என் கண்ணே பட்டு விட்டால்
என்ன செய்வேனென்றே
சடாரென பார்வையை
திருப்பிக் கொள்கிறேன் !

என் மனநிலை அறிய
முகம் நோக்கும் உன் 
குறுகுறு விழி கண்டு
எனை மறந்து சிரிக்கிறேன் !

உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கிறேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே எனை தேடுகிறேன் !

என் கண்ணான கனியமுதே !





பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2 
பிள்ளைக் கனியமுதே ! - 3

Monday, April 14, 2014

பிள்ளைக் கனியமுதே - 3


காணும்  புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலையமானதே ! 

புத்தகங்களை எல்லாம்
நீயே கிழித்து விட்ட போதும்
அவற்றை ஒருங்கிணைத்து நீ
ஓர் நாளும்  படிக்க மறந்ததிலையே !

நீ  எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எனக்கு
பொக்கிஷமானதே !

குளிர்சாதனப் பெட்டி
சுவர் - தொலைக்காட்சி கணினி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !

நீ உதிர்க்கும்  வார்த்தைகளுக்கு
பொருள் விளங்காது போயினும்
என் இதய பேழையில்
பொக்கிஷமென பாதுகாக்கிறேன் !

என் செல்லக் கண்மணியே !


பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2

Friday, March 28, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 2

சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள்


கிண்ணமதில்  அன்னம்
ஏந்தி -  உன்  பவழ வாயில்
நான் ஊட்ட -மெல்ல
விரல் கடித்து  சிரிப்பாயே !


அன்னமும்  வெஞ்சனமும்
உன்  பிஞ்சுக்  விரல்களை
வண்ண மயமாக்கிட - தரையில்
எழுதிடுவாய்  எழில்  ஓவியம் !


அங்கீ .... அங்கீ ..... என்று  மழலை  பேச்சுடன்
குப்புற  விழுந்து  - மெல்ல தலைதூக்கி
நீ   சிரிக்க - கள்ளமிலா  சிரிப்பதில்
கொள்ளை போகுதே எம் உள்ளமே !


தரையில்  பரபரவென  நீந்தியே
கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து  நீ  உதிர்க்கும்
புன்னகைக்கு தான்  விலை மதிப்பில்லையே !


நீ  கண்களை இரு கரங்கொண்டு
மூடிக்  கொள்ள - நான்  "பிடிச்சா "
சொல்லிச்  சிரிக்க - என்  கண்களை
உன் பிஞ்சுக்  கரங்களால்  மறைத்திடுவாயே !


கண்  மறைத்த  சற்று  நேரத்திற்கெலாம்
கைகளை  விலக்கிப்  பார்த்து
கலகலவென   முன்னெட்டுப்  பற்கள்  தெரிய
சிரித்து   உலகையே  மறக்கச்  செய்திடுவாயே !


உன்   செல்லக்   குறும்புகளெலாம்
கட்டிக்   கரும்புகளாக  இனிக்கின்றனவே !
உனை   என்   மகவாய்   ஈன்றிட 
என்ன    தவம்   செய்தேனோ  !


உன்னால்   பிறவிப்  பயன் 
அடைந்தேனே  !  - என்  வாழ்வும்
இன்று   முழுமை  அடைந்ததே
உன்னாலே - என் கண்மனியே !







பிள்ளைக்  கனியமுதே ! - 1 


 

Thursday, March 6, 2014

பிள்ளைக் கனியமுதே ! -1


உன்னாலே ! உன்னாலே !!




விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !

விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !

மௌனத்தையே  தன்
மொழியென  கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !

விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !

மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !

மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !

Sunday, January 26, 2014

முதல் ஸ்பரிசம்



கனவினிலும் கற்பனையிலும்
உன் முகம் கண்டு
ஆயிரமாயிரம் கதைகள் பேசி
கொஞ்சி விளையாடி
புன்னகைத்து - பூரித்து
உன் வரவிற்காய்
தவமாய் தவமிருந்து
கருவினில் மெல்ல
துள்ளியும் - செல்லமாய்
பிஞ்சுக் கால்களால் உதைத்தும்
உன் ஒவ்வோர் சிறு
அசைவிலும்  அதிர்விலும்
இனிய நினைவுகளை ஏற்படுத்தி
உன் ஜனன மணித்துளிகள்
ஒவ்வொன்றும் - மரணத்திலும்
மறவா  உயிர்த்துளிகளாகிட
 உன் விரல்கள் தீண்டிய
மென்மையான ஸ்பரிசத்தால்
மகிழ்ச்சி  வெள்ளமதில்
இதயம் தத்தளிக்க - அதுவே
ஆனந்தமாய்  கண்ணீரென
வெளிப்பட - வார்த்தைகள்
ஒவ்வொன்றும் 
தொண்டைக் குழியின்
அடியாழத்தில் இருந்து
துள்ளி ஓடி வரத் துடிக்க
ஏதோ ஒரு விசை
அவற்றை மீண்டும்
உள்ளே தள்ளி அழுத்த
உன் இதழ் உதிர்த்த
சிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !
என் உயிர் தனில் நிறைந்திட்ட
உன் முதல் ஸ்பரிசத்தால் !!!!





Wednesday, August 28, 2013

கண்ணன் வந்தான் !!!






கண்ணன் வந்தான்
எங்கள் கண்ணன் வந்தான் !
களிப்பினை ஏந்தி
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்ணீர் துடைக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
காத்திருந்த  எம்மை களிப்பிலாழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்களால் சிரித்து கவலைகள் மறக்கடிக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
கட்டிக் கரும்பென சுட்டிக் குறும்போடு 
எங்கள் கண்ணன் வந்தான் !
காலமெலாம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !

Monday, May 27, 2013

தவம் தந்த வரம்


அன்பு  உள்ளங்கள் உன்
ஆசை முகம் கண்டால்
இன்பத்தில் திளைத்திங்கே
ஈந்திடுவர்   முத்த மழையே -
உந்தன்  பிஞ்சுக் கண்ணத்திலே !!
ஊறிடும் நாவதன் அசைவினில்
எச்சிலுடன் முதல் சொற்களும் பிறக்க
ஏட்டினில்  பொறித்து வைத்தேன் - அவற்றை
ஐசுவரியமாய் நெஞ்சில் காத்து  வைத்தேன் !!!
ஒயிலாக நீ  அமர்வதும்
ஓடியாடி  துள்ளித் திரிவதும்
ஒளவி நீயும் தட்டி கொட்டி உண்ணும்

அழகைக் காண
கிடந்தேன் தவம் !!
பெற்றேன் வாழ்வில்
உயர் வரம் !!
நலமாய் வளமாய்
நீயும் வாழ இறைவனிடம்
இறைஞ்சுவேன் -
கோடி தரம் !!

பி.கு. ஒளவி - வாயால் பற்றி

Related Posts Plugin for WordPress, Blogger...