Thursday, December 13, 2012

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

செய்நன்றி தனை மறந்து
முகத்துக்கு முன் துதியும்
முதுகுக்குப் பின் மிதியடியும்
மலிந்து விட்ட சமூகத்தில் -
இனியும் வேண்டாம் ஒரு பிறவி  !!!

பெயரளவில் பெண்ணுரிமை
என்றுரைத்து விட்டு
வழக்கமான கடிவாளங்களை
பொன்னால் பூட்டும் உலகில்
இனியும் ஒரு பிறவி - வேண்டவே வேண்டாம் !!!



உழைப்பவன் செவ்வனே உழைக்க
எவனோ ஒருவன் - அட்டையென
உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்
இனியும் வேண்டாம் -
ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

யாமின்றி அணுவும் அசையாது
என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? - என்று
எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக் 
காட்டேரிகளின் மயான உலகில்
புல்லாய்க் கூட - வேண்டாம் ஓர் பிறவி !!!


http://www.vallamai.com/literature/poems/29665/ 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...