Monday, January 25, 2016

தொலைந்து போன கடிதம்



சொல்ல மறந்த கதைகளையும்
கண்ணோடு கண் நோக்கி
சொல்லிச் சென்ற காதலையும்
விரிவாய் விளக்கமாய்
உள்ளக்கிடக்கையின்  பிம்பமென
வெளிச்சமிட்டுக் காட்டிய கடிதம் !
அன்பு ..... நட்பு ..... காதல் .....
உறவு ..... கல்வி .... விண்ணப்பம் ....
வேலைவாய்ப்பு.... உத்தியோகம்.....
பதவி உயர்வு .... என பலவும்.....
மனித வாழ்வின் நல்லன கெட்டன -
அனைத்தும் சொன்ன கடிதம் !
அன்பிற்கு உருக்கொடுக்கும்
கையெழுத்தில் உருவான கடிதம்
எழுத்துக்களில் சுமந்து வருமே
உயிரையும் உணர்வையும் உயிர்ப்புடனே !
இருபக்க அஞ்சல் அட்டையும் - நான்கு பக்க
அஞ்சல் கடதாசியும் கொண்டிருக்கும்
வழிய வழிய அன்புகளையும் ஆசிகளையும்
பொக்கிஷமாய் நம்மிடம் சேர்த்திடவே !
இன்றோ .... நாம் தொலைத்து விட்டோம்
கடிதங்களை மின்னஞ்சலிலும்
வாழ்த்து அட்டைகளை குறுஞ்செய்திகளிலும் !
தொலைந்தது கடிதங்கள் மட்டுமல்ல ......
உள்ளங்களுக்கு இடையேயான
தன்னலமில்லா அன்பும் அக்கறையும் கூட !

தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை. 
 

Wednesday, January 20, 2016

ஹைக்கூ கவிதைகள்

1) மனங்களை நாளும் கொன்றுவிட்டு
எங்கென்று எதிர்பார்த்து அலைகிறோம்
மனிதம் !

2) வரனும் கொடுத்து தட்சணையும் கொடுத்தும்
விடாமல் துரத்துகிறது பலரது வாழ்வை -
வரதட்சணை !


3) கதை கேட்டு சிந்தனையுடன் குழந்தை உறங்க
சிந்திக்க மறுத்தும் மறந்தும் தலைகீழ் செய்கையாய்
மனிதன் !

4) பலமறியா காரணத்தால் பயத்துடன்
பலமற்ற மனிதனின் அடிமையாய் -
யானை !

5) வண்ண ஓவியமதில் வெள்ளை நிறம்தனை
கொட்டிச் சென்றவர் யாரோ ? -
வெண்பனி !

Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துகள் !



புது அரிசியோடு புதுப் பானையும்
பொங்கி வரும் பொங்கலும்
எதிர் வரும் புதிய நாட்களில் - மகிழ்ச்சி
பொங்கி வருவதைக் குறிக்க
தித்திக்கும் கரும்பும் வெல்லமும்
இனிமையான தருணங்களை
வாழ்வினில் கொண்டு வந்து சேர்க்க
கதிரோனை வேண்டி நிற்கும் தருணமிதில்
இயற்கையோடியைந்த வாழ்வுதனை
வாழ சபதமேற்போம் !
நீராதாரங்களை நம் குடியிருப்பாக்காது
உயிர் நிலங்களில் கட்டிடங்களை இறக்கி
மண்ணிற்கு மரண தண்டனை கொடுக்காது
நம்மை நேசிக்கும் இயற்கையை -
நாமும் நேசிக்கப் பழகுவோம் !
நலமாய் நாளும் வாழ்வோம் !


Related Posts Plugin for WordPress, Blogger...