Thursday, June 9, 2016

காணாமல் போன காவிரி!

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த வாரம் அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும். 




ஆடி விளையாடும் 
ஆறும்  இன்று
காணவில்லையே என
மணலுள் தேடித் தேடி
ஓய்ந்தவளாய் - வீடு
திரும்புகிறாளோ ? -
சிறு கிள்ளை !
வான் பொய்ப்பினும்
தான் பொய்யா காவிரி
கண் முன் மணல் மேடாய்
காட்சிப் படுகிறது - நன்றாக
பார்த்துக் கொள் சிறு நங்கையே !
நாளை மணலும் கூட
மாயமாகிப் போய் - காவிரி
கட்டாந்தரையாய் காட்சியளித்தாலும்
ஆச்சர்யமில்லை ! - மீண்டும் இங்கு
காவிரி புது நுரையாய் பொங்கி ஓட
சிவபெருமானிடம் காவிரியை
அகத்தியர் பெற்று வர - விநாயகர்
காகமென வடிவெடுத்து வந்து
கமண்டலத்தை கவிழ்த்திட  வேண்டுமோ ?

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதைக்கான இணைப்பு



Saturday, June 4, 2016

பாசத் துணைவன் !

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 28ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.


ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
 ஒரு காலம் !
உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !
வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏறு தழுவியது
ஒரு காலம் !
சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !
மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய்  இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -
மனித  இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !

http://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_31.html

வாய்ப்பளித்த நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...