Sunday, October 13, 2019

சாம்பலாய் முடியும் உடல்



உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் ! 

Wednesday, October 2, 2019

அன்னையின் அரவணைப்பில்....



அன்னையின் தோளில் சாய்ந்து
உலகத்தின் அழகில் இலயித்திருக்க
முன்னின்று பின்னோக்கியும்
பின்னின்று முன்னோக்கியும்
ஓடும் காட்சிகள்
நிகழ்வுகளின் சாட்சிகளாய் !
காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
அன்னையின் தோள்
தலையணையாயும் – அவர்தம்
கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
சுகமான துயிலும் கண்களை
வருடியபடி தழுவிக் கொள்ள
அன்னையின் முத்தங்கள்
தாலாட்டு பாட – உறங்கிப் போன
கிள்ளையின் துயில் கலையாது
அலுங்காது நடக்கும் கலை
அன்னைகட்கெலாம் – தானாக
கைவந்து சேரும் உத்தியன்றோ !
அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
பின்னிருக்கும் உதடுகளில்
புன்னகையும் – உள்ளத்தில்
ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
வித்தை கைவரப் பெற்றவர்கள்
கிள்ளைகள்!

Friday, September 6, 2019

நட்பு என்பது யாதெனில்...


பிரதிலிபி நடத்தும் இருவேறு போட்டிகளில் எனது படைப்புகள். 

பயணங்கள் முடிவதில்லை என்ற போட்டிக்கான எனது படைப்பு


மாமழை என்ற மழை குறித்து கவிதை எழுதும் போட்டிக்கான படைப்பு


நட்புக்கள் வாசித்து உங்களது கருத்துகளை பகிருங்கள். நன்றி.
 



Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Friday, August 16, 2019

பொம்மை



கிள்ளைகளின் கரங்களால்
உயிரும் உணர்வும்
ஊட்டி ஊட்டி உருவாகிறது -
வீட்டில் புதியதோர் உறவு !
உண்ண உறங்க குளிக்க
என அனைத்து செயல்களுக்கும்
துணையாய் - புன்னகை மாறா
அழகுடன் ஐக்கியமாகிறார்கள் !
சிலபல சமயங்களில் 
கிள்ளைகட்கே கிள்ளைகளாகி
அவர்தம் மழலை மொழிக் கொஞ்சல்களால்
நம்மையும் ஏங்கத்தான் வைக்கிறார்கள்!
துள்ளும் கிள்ளைகளின் அள்ளும் அழகினை
முடக்கி விட்டனவோ - மின்னணு சாதனங்கள் ?
இல்லத்தை உயிர்ப்புடன் இயக்க
மீண்டும் மீட்டு வருவோம் - அழகு பொம்மைகளை !

பிரதிலிபி நடத்தும் இரண்டு போட்டிகளில் எனது படைப்புகள்

நட்பே துணை எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/நட்பு-என்பது-யாதெனில்-ahL7nMMHZyw7

பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/இயற்கை-பால-குகைகள்-RCqeiU48AcEC

நண்பர்கள் வாசித்து, உங்களது மேலான கருத்துக்களை வழங்குங்கள். நன்றி.


Wednesday, August 7, 2019

வர்ணஜாலம்



வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும்
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில்
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

Thursday, August 1, 2019

கருப்பு



வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
 
 
இவ்வார  தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Thursday, July 11, 2019

இனிமேல் மழைக்காலம்





துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !


நன்றி, தினமணி - கவிதைமணி

Tuesday, June 18, 2019

கனமான கணங்கள்


பல கனமான கணங்களை
மெல்லிய புன்னகை
முலாம் பூசியே கடக்கிறேன் !
புன்னகை முலாமும் உதிர்ந்து
மெளனக் கவசம் பூட்டி
வாயடைத்து நிற்கிறேன் எனில்
வார்த்தை கீறல் உண்டாக்கிய
இரணமும் - உறைந்த
இரத்தத்தின் பின்னிருக்கும் வலியும்
சொல்லம்பு வீசிச் சென்ற
வாய்ச்சொல் வீரர்களுக்கு
புரிய வாய்ப்பொன்று
வாய்க்காதும் போய்விடுமோ ? என
உள்ளத்து எண்ணங்களோடு
சச்சரவு செய்தபடியே தானிருக்கிறேன்!

நன்றி, முத்துக்கமலம் .

Friday, June 7, 2019

கோடை விடுமுறை

பரீட்சைகள் முடிந்தன
பயமெல்லாம் தீர்ந்தன !
ஒய்வெடுக்கும் காலமிது -

கிள்ளைகளின் மூளைகளுக்கே !
துறுதுறுவென துள்ளியோட நேரமிது
சின்னஞ்சிறு கால்களுக்கே !

தன் பணியை சூரியன்
செவ்வனே செய்ய -
குளிர்விக்க பல்வகை கனிகளும்
இயற்கையின் கொடையாய் !
தாகம் தீர்க்க தண்ணீரை விட
சிறந்ததொன்று வேறெதுவுமில்லை !
குளிர்பானங்களை ஒதுக்கி வைப்போம் -
நமக்கேன் வீண் தொல்லை ?

சுட்டெரிக்கும் சூரியனை
திட்டித் தீர்ப்பதை விடுத்து
முதற் கடமையாய்
மரம் வைத்து காத்திடுவோம் -
அடுத்த கோடையிலேனும்
அதன் மடியில் இளைப்பாறிடுவோம் !

இயற்கையை பகைத்துக் கொள்வதை விட்டு
இயற்கையோடு கைகோர்த்து
காலநிலை சீராக்குவோம் !
இயற்கையோடு இயைந்த வாழ்வால்
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இம்மண்ணில் நம் வாழ்வினையே !

Wednesday, May 15, 2019

முதல் முத்தம்







இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Wednesday, March 20, 2019

நிலாக்கால நினைவுகள் !






செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

இவ்வார தினமணி கவிதை மணி பகுதியில் வெளியானது.

Friday, March 1, 2019

தாமரை




தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !



இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Sunday, January 20, 2019

உன் விழிகளில் ....



உன் விழிகளில் படர்ந்திருக்கும்
ஈரத்தின் காரணம் - காரியத்திற்காய் !
இப்படியே பழகிப்போன  - மனத்தில்
ஊறிப்போன எண்ணங்களின் பிம்பங்கள்
சாட்டையடியாய் உள்ளத்தில்
சுரீரென்று விழும் வேளையில்
நம் உறுதியை குலைக்கலாம் !
உள்ளத்தை சுக்கல் சுக்கலாய் உடைக்கலாம் !
வாதம் போல் செயலிழக்க செய்யும்
வார்த்தை அம்புகளை
திடமான மனமெனும் கேடயம் கொண்டு
எதிர்கொள்வோம் !
வாழும் வாழ்வு நலமாகட்டும் !
வசந்தம் நம் வசமாகட்டும் !


இக்கவிதை   இவ்வாரம் தினமணி கவிதைமணி பகுதியில் வெளியானது.

Saturday, January 5, 2019

மழையின் சபதம் !

வரவேற்க ஆளும் இல்லை
வந்தால் தங்க இடமும் இல்லை
வா.. வா... என்றே ஏங்குவதும்
வந்தால் முகம் திருப்பி ஓடுவதும்
வந்தாலும் குற்றம் - வராவிட்டாலும்
வசவுகள் ஆயிரம் ஆயிரம் !
பெருமூச்செறிந்து தவிக்கிறேன் !
ஆறு குளம் கால்வாய்
நீர்வழிப் பாதையெலாம்
குப்பை கிடங்குகள் ஆயின !
ஏரிகளெலாம் அடுக்கு மாடி
குடியிருப்புகளாயின ! - எம்
இடமெலாம் மானுடரே ! - நீவிர்
ஆக்கிரமித்திட - ஆக்கிரமித்த
உம் மடிகளிலேயே தஞ்சம் புகுந்தோம் !
அலறி அடித்து எங்கே ஓடுகிறீர் ?
கிடைக்கயில் சேமிக்க மறுப்பீர்
கிடைக்காத வேளையில்
 ஏங்கி தேம்பி தவிப்பீர் !
நீர்ப்பந்தல் வைத்து குடித்த
நீரெலாம் இன்று - குடுவைகளில்
பல பெயருடன் - பல சுவையுடன் !
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் !
நாளை நீருக்காக போர் மூளும் -
வறண்ட தொண்டையுடன்
கண்களில் இருள் கவிய
மூச்சும் இரைக்க நிற்கையில்
சடாரென்று முகத்தில் விழுந்து
சம்மட்டியாய் அடித்து உணர்த்துவேன்
ஒற்றை மழைத்துளியாய் !

Friday, January 4, 2019

தோழா !

சென்ற ஆண்டு பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில் இவ்வாண்டின் முதல் பதிவு. சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை, இவ்வாண்டின் முதல் பதிவாய்.





தோளோடு தோளாய்
தோழனென்று ஆனாய் !
பேசிப் பேசி தீராக் கதைகள்
காலமெலாம் எஞ்சி நிற்பது
நட்பெனும் பெட்டகத்துள்ளே !
பேசுவோம் ... பேசுவோம் ...
இப்போது நமக்குள்ளே !
நாளை நம் நட்பின் பெருமையை
பகிர்ந்து மகிழ்வோம்
நம் சுற்றத்தோடே !

Related Posts Plugin for WordPress, Blogger...