Thursday, February 28, 2013

மாயமான 2012

picture

மாயமாகிப் போனது 2012
ஆம் ! - காலத்தின் ஓட்டத்தில்
மாயமாகித் தான் போனது !!!
மாயமாக்கித் தான் போனது -
ஓர் யுவதியின் வாழ்வு தனையும் !!!
மருத்துவம் பயின்று வந்த மலர்
மரித்துத் தான் போயிற்று -
மனதினில் ஈவிரக்கமில்லா
சில ஓநாய்களின்
கொடூர வெறித் தாக்குதலால் !!!
எத்தனை  இலட்சியக் கனவுகள்
அன்று மரித்துப் போயினவோ ?
மனித உருவில் உலவும்
சில மாக்களால் - அந்த வனிதையின்
பெற்றோரின் எத்தனை எத்தனை
ஆசைக்கனவுகள் சுக்கல் சுக்கலாகிப்
போயினவோ ?? - காலத்தின்
ஓட்டம் தனில் தேசத்தையும்
மனித இதயங்களையும்
கொந்தளிக்கச் செய்த சம்பவமும்
மாயமாகித் தான் போனது !!!
இந்நிலையில் 2012
மாயமாகிப் போனதில்
என்ன ஆச்சரியம் ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=85 

Wednesday, February 27, 2013

காதலர் தினம் - ஹைக்கூ

காலையில் காதலின் அடையாளம்
மாலையில் பலர் காலடியில் சின்னாபின்னம்
மௌனமாய் அழும் மலர்கள் !!!



பூவும் பலூனும் விற்றவருக்கு அமோக இலாபம் !
யுவன் யுவதிகட்கோ சேமிப்பெல்லாம் கரைந்தாயிற்று !
அன்று காதலர் தினம் !!!



மென்மையான மலரும் உண்டு
கூரான முள்ளும் உண்டு - ரோஜா
காதல் இரண்டிலும் தான் !!!



அகத்தில் உருவாகி
கண்களில் அரங்கேறும் -
காதல் !!!
அடக்கி ஆழ்வதல்ல
என்றும் அன்புடன்
துணை நிற்பதே -காதல் !!!

காதலர் தினம்

ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!




நட்பென்ற போர்வையில்
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???




காதலும் காதலிக்கப்படும் பெண்களும்
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....



விரும்பும் இதயம்
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!

http://www.tamilthottam.in/t36341-topic#219883

ஒரு மலரின் ஏக்கம் !!


 எழில் கொஞ்சும்
புத்தம்புது மலர்கள்
புன்னகையை உதிர்க்க -
கவிதைகள் பல பேசும்
உன் விழி மலர்கள்
வாடியிருப்பதும் ஏனோ ?

மலரகங்களில் பல நூறு
செலவழிக்க யோசிக்காதவர்கள்
உன்னிடம் சில ரூபாய்கட்கு
பேரம் பேசி நிற்கிறார்களே
என்றெண்ணிக் கொண்டிருக்கிறாயா
பூவழகே ???

http://tamilnanbargal.com/node/49508 

Tuesday, February 26, 2013

பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???




வினோதினி... வித்யா....
இன்னும் எத்தனை 
வனிதையர்  ஆசிட்டின்
அகோரப் பசிக்கு
இரையாகி - துடித்து
பலியாயினரோ ???


காதல் வந்துவிட்டது -
உன்மேல் எனக்கு !!!
ஒற்றை வார்த்தையைக்
கேட்டதும் - உங்கள்
பின்னால் ஓடிவர
பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???


விரும்பியதாகவும் காதலித்ததாகவும்
கூறுகிறீர் - நீங்கள் விரும்பும் ஒன்றை
கண்ணெனக் காக்க மாட்டீரோ ??
விரும்பிய ஒன்றை
உருத் தெரியாமல் சிதைக்கவும்
மனம் ஒப்பிடுமோ ???


உங்கள் சகோதரிகளை
கண்ணென காத்திட
துடிக்கிறீரே - எல்லாப்
பெண்களும் எவரோ ஒருவரின்
சகோதரி தானென்பது
ஏன்  உங்களுக்கு விளங்கவில்லை ???

வலியோர் அநீதி இழைத்துவிட்டு
சட்டத்தின் திரைக்குப் பின்
முகத்தை மறைத்துக் கொள்ள
இழப்பும் வலியும் ஏனோ
எளியோருக்கு மட்டுமே !!!

இறைவா !!! இனி
சிருஷ்டிக்கும் ஒவ்வோர்
பெண் சிசுவுக்கும்
உறுதியான பாதுகாப்பான
கவசத்தை கொடுத்து விடு !
ஏனெனில், உன் பிரபஞ்சத்தில்
பாவையருக்கு பாதுகாப்பு இல்லை !!!

பி.தமிழ் முகில் நீலமேகம்

http://www.vallamai.com/literature/poems/32533/ 
Related Posts Plugin for WordPress, Blogger...