Sunday, January 26, 2014

முதல் ஸ்பரிசம்



கனவினிலும் கற்பனையிலும்
உன் முகம் கண்டு
ஆயிரமாயிரம் கதைகள் பேசி
கொஞ்சி விளையாடி
புன்னகைத்து - பூரித்து
உன் வரவிற்காய்
தவமாய் தவமிருந்து
கருவினில் மெல்ல
துள்ளியும் - செல்லமாய்
பிஞ்சுக் கால்களால் உதைத்தும்
உன் ஒவ்வோர் சிறு
அசைவிலும்  அதிர்விலும்
இனிய நினைவுகளை ஏற்படுத்தி
உன் ஜனன மணித்துளிகள்
ஒவ்வொன்றும் - மரணத்திலும்
மறவா  உயிர்த்துளிகளாகிட
 உன் விரல்கள் தீண்டிய
மென்மையான ஸ்பரிசத்தால்
மகிழ்ச்சி  வெள்ளமதில்
இதயம் தத்தளிக்க - அதுவே
ஆனந்தமாய்  கண்ணீரென
வெளிப்பட - வார்த்தைகள்
ஒவ்வொன்றும் 
தொண்டைக் குழியின்
அடியாழத்தில் இருந்து
துள்ளி ஓடி வரத் துடிக்க
ஏதோ ஒரு விசை
அவற்றை மீண்டும்
உள்ளே தள்ளி அழுத்த
உன் இதழ் உதிர்த்த
சிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !
என் உயிர் தனில் நிறைந்திட்ட
உன் முதல் ஸ்பரிசத்தால் !!!!





Monday, January 13, 2014

பொங்குக பொங்கல் ! அன்பையும் அமைதியையும் அகிலமெலாம் பரப்பிட !!!



புது பானையில்
புது அரிசி -பனை
வெல்லம் கொண்டு
பொங்கலிட்டு -
மங்கள மஞ்சளும்
தித்திக்கும் செங்கரும்பும்
வாழ்வாதார ஆதவனுக்கு
படையலிட்டு -
ஏர் கலப்பையுடன்
கால்நடைகளையும்
நினைவில் கொண்டு
வாழ்த்தி வணங்கி
உதிரமதை வியர்வையாக்கி
விதைக்கு வியர்வையையே நீராக்கி
உலகுக்கே உணவு உடை வழங்கும்
உன்னத ஆத்மாக்களாம்
உழவர்களை எந்நாளும்
நினைவில் கொள்வோம் !
மனித வாழ்வுக்கு
விவசாயமே ஆதாரமென்பதை
நினைவில் நிறுத்தி
இயற்கையை காப்போம் !
இயற்கையின் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்வோம் !


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!



Saturday, January 11, 2014

தென்றல் !!!!

காதில் கிசுகிசுத்து விட்டு
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -

நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?

தலையசைத்தாடும்  மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !

தண்மையாய்  சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!

Related Posts Plugin for WordPress, Blogger...