Sunday, November 23, 2014

இயற்கை அளித்த அழகு !

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்  மலையடியை முத்தமிடும் நதி - கவிதை எழுத அழைப்பு என்ற பதிவில் இந்த அழகிய இயற்கை காட்சிக்கு  கவிதை எழுத கடந்த 12ம் தேதி  அழைப்பு விடுத்திருந்தார். 

இயற்கை காட்சியும் அதற்கான கவிதையும் இதோ:




நீல வானுக்கும்
நீல நதியதற்கும்
இணைப்புப் பாலமாய்
மலை முகடுகள் !
வானுக்கான தன் அன்பை
நதிப் பெண்ணவள்
நாணி நடமிட்டு
மலையதன் அடிதனில்
மெல்ல கிசுகிசுத்துச் செல்ல
அது மலைச் சிகரத்தில்
எதிரொலித்து - வானைச்
சென்றடைகிறதோ !

இயற்கையின் எழிலும்
வண்ணம் பல சுமந்த
இந்த உயிரோவியத்தினூடே 
மனிதனின்  செயற்கை
வீடும் - வாகனமும்
வளைந்து நெளிந்த
குறுகிய சாலையும்
அழகாக உருமாறி தான்
தெரிகிறது !
பூவுடன் சேர்ந்த
நாரும்  கூட
மணம்  பெறுவது போல !


நல்லதோர் வாய்ப்பினை வழங்கிய சகோதரர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !


Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




அறியாமை எனும்

இருள்  நீங்கி
உள்ளங்களிலும்
இல்லங்களிலும்
இன்ப ஒளி
வெள்ளமென
பாய்ந்து
நிறைவினை
கொடுக்கட்டும் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

Monday, October 13, 2014

சிந்தனை திருட்டு

பிறரது சிந்தனையை திருடுதல் முறையோ ?

அல்லது ஒருவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களும் கருத்துக்களையும் கூட நகல் எடுத்து விடக்கூடிய அளவுக்கு இன்று விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ ? 

பதிவினை வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதை Copy செய்து தங்களது வலைப்பக்கத்தில் Paste செய்து விடுகிறார்களே ! இவர்களது சுறுசுறுப்புக்கு முன் எறும்பு கூட தோற்று விடும் போல் உள்ளதே !

கேள்வி எழுப்பினால், இத்தகையோரிடமிருந்து பதில் கிட்டுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எனது கவிதை புன்னகை ஒன்றே போதுமே !  இதனை, சிவராமா என்பவர், தனது  Mind Moulders Blog என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.அதற்கான இணைப்பு http://sivamindmoulders.blogspot.com/2014/05/blog-post_11.html. பதிவினை நான் வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதனை எடுத்து தன் வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறார்.

எனது கவிதையை வெளியிட்டு உள்ளாரே, எனது பெயர் , வலைப்பூ முகவரியையேனும் சேர்த்து கொடுத்திருக்கலாமே. அவரது வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இதேபோல், பலரது பதிவுகளை சேர்த்தே அந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கிறார். 


Monday, September 15, 2014

விருது !

சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் " Versatile Blogger" என்ற விருதினை வழங்கி என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






இந்த விருதினை இன்னும் சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1. மகிழ்நிறை தளத்தில் எழுதிவரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள்.

2. சித்ரா சுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் தளத்தில் எழுதி வரும் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.

3. இது இமாவின் உலகம் தளத்தில் எழுதிவரும் சகோதரி இமா க்றிஸ் அவர்கள்.

4. பூந்தளிர் தளத்தில் எழுதி வரும் சகோதரி தியானா அவர்கள்.

5. கைவினைகளில் கலக்கி வரும் தோழி சரண்யா அவர்கள்.

Friday, August 29, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

படத்திற்கான கவிதை 

 


நிலைக்  கதவுல தலைசாய்ச்சு
நெலையில்லாம தவிக்கும் மனசுல
நெனப்பெல்லாம் மாமன் மேலிருக்க
மணம்  நெறஞ்சு கிடக்குற
மூங்கில் பூக்கூடையைப் போல
மனசெல்லாம் மாமன் மணம்  வீச
பூச்சரத்தை சூடிடத் தான் - மாமன்
புதங்கிழமையில பொன்னோட வந்திடுவானோ -
பூவரசியே !  எந்நாளும் நீயே எந்தன்
வாழ்வரசியே ! என்று சொல்லி
பூரித்து நிற்கத் தான் செய்ய
புது மாப்பிள்ளையாய் மாமன் அவனும்
வாசல் வந்து சேர்ந்திடுவானோ ?
 மாமனைக் கண்ட மாத்திரத்தில்
வெட்கம் மட்டுமே துணையாகிப்போக
மெல்ல கண் விரித்து தான்
மாமனை நேரா பார்த்திடுவேனோ - இல்லை
முகம் மூடி விரலிடுக்குல பார்த்திடுவேனோ !
கண்ணிரண்டுல கனவு கோடி மின்ன
உதட்டோரத்துல புன்னகை கீற்றாய் மின்ன
உனக்காகவே காத்துக் கிடக்கும் என்னை
உடனே வந்து சேர்ந்திடு - போகும் உசிரை
உன் கூடவே கூட்டிப் போயிடு - உன்
நெஞ்சுக் கூட்டுல பொக்கிஷமா சேத்துடு
என் மாமனே !


 விருப்பத் தலைப்பு 

மலர்களே ! மலர்களே !






மலர்களே ! மலர்களே !
மண்ணின் புன்னகை  சுமக்கும்
அழகு இதழ்களே !
வண்ணங்கள் பல சூடி
எண்ணங்கள் களவாடும்
மாயமந்திரம் கற்றுத் தந்த
மந்திரவாதி அவர் யாரோ ?
அவர்தம் ஊர்  ஏதோ ?

மணம் சுமக்கும் மாதரே
மனம் கவர்ந்து கொண்டீரே !
மண்ணில் வாழ்நாள் குறைந்தாலும்
வாழ்வாங்கு வாழும் சிறப்பு
நீரே தான் பெற்றீரே !
அதற்கான மார்க்கம் தனையே
அவசியமாய் உரைப்பீரே -
உணர்ந்தால் உயருமே  எம் வாழ்வே !

கண்ணுக்கு விருந்தானீர் !
கருத்துக்கு கருவானீர் !
காசினிக்கு கவினானீர் !
களிப்பிற்கு காரணமானீர் !
காலமெலாம் உங்கள் எழிலில்
கவலை மறந்து யாம் வாழ
கட்டுக்கடங்கா ஆசை அலைமோதுதே !
உமை போல் வாழ திண்ணம் மேலோங்குதே !

Thursday, July 3, 2014

பாழ் உள்ளம்



பத்து திங்கள் மடிசுமந்து
பத்திரமாய் பொக்கிஷமென
பெற்றெடுத்து - உதிரம் தனையே
உணவாக்கி - பொன்னெழிலே !
நீயே ஆனாய் எந்தன் உலகமே என
உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ ?
அவளும் ஓர் பெண்ணன்றோ ?
அன்னையவள் மீது பிறக்கும்
அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால்
ஏற்படாததும் தான் ஏனோ ?


பெண்ணென்பவள் போகப்
பொருளாகிப் போனாளோ ?
காணும் பெண்ணுருவெல்லாம்
மயக்கமடையச் செய்யுதோ ?
உந்தன்  மயக்கத்திற்கு
விதிவிலக்கென்பது இல்லையோ?


பச்சிளம் கிள்ளை தொடங்கி
பழுத்த மூதாட்டி வரை
பெண்ணுரு கொண்ட
அனைவர் மீதும் உந்தன்
ஆசை அலைபாயுமெனில்
குறை உந்தன் உள்ளம் தனிலே
உள்ளம் தோன்றும் எண்ணம் தனிலே !


உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்கா காளையென
தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை
உணருங்கள் !


பெண்ணெனப் பிறப்பெடுத்தவள்
இரத்தம் தோலினாலான
சதைப் பிண்டமல்ல !
உயிரும் உணர்வும்
உன்னதமும் உறுதியும்
மிகக் கொண்டவள் !


சிரிக்கும் சிலையென எண்ணி
சீண்டிப் பார்க்க முனையாதீர்
சீறிப் பாய்ந்து வந்தால்
சின்னாபின்னமாய் சிதைந்திடுவீர் !


சட்டம் கொண்டே உங்கள் புழு  நெளியும்
சாக்கடை எண்ணங்களை
சுத்திகரிக்க முடியுமெனில்
நீங்களும் இருப்பீர்கள்
நாளை - இராட்சதக் கூண்டுகளில்
காட்சிப் பொருளாய் !


உங்களையும் ஆள நாளை
இறைவன் படைத்திடுவான்
ஏழறிவு ஜீவராசிகளை !


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/பாழ்-உள்ளம் 

Tuesday, June 10, 2014

நிலை மாறாக் காதல் !

thmizmukil

தகதகவென  ஜொலிக்கும்
தங்கக் கிரீடம் சுமந்து
சூரியப் பெண்ணவள்
வான் சோலையில் உலவ
எதிர்பட்ட  மேகக்  காதலனை
கண்டதும் மெல்ல
நாணமதுவும் ஆட்கொண்டு விட
தன்  சூரியக் காதலியை
மேகக் காதலன்
ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ
வெட்கத்துடன் சிறு  கீற்றாய்
புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு
மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள
ஆங்கே  அரங்கேறுகிறது
அந்திப் பொழுதிலோர்
நிலை மாறாக்  காதல் !

நன்றி, வல்லமை மின்னிதழ்
 http://www.vallamai.com/?p=46591 

Thursday, May 29, 2014

அன்னை



ஈரைந்து மாதங்கள்
கருவினில் உயிர் தாங்கி
கிள்ளையின் முதல்
அழுகுரல் கேட்டதும்
பெரிதும் உவந்த அன்னையவள்
வாய் வார்த்தைகளெல்லாம்
தொண்டைக்குழி விட்டு
வெளியேற போராட
ஓராயிரம் வார்த்தைகள்
மடைதிறந்த வெள்ளமாய் -
கண்களின் வழியாக !




அடி வயிற்றில்
எட்டி உதைத்து
சுகமான வலி தந்த
பட்டு ரோஜா
பாதங்கள் நொந்திருக்குமோ
என்றெண்ணியே
அன்னையவள் மெல்ல
தன் உதடுகளால்
ஒற்றித் தருகிறாள்
சுகமான ஒற்றடம் ! 




தளர்ந்த புன்னகையுடன்
அன்னையவள் கிள்ளை
முகம் பார்த்து சிரிக்க
உறக்கத்திலும் - தன்
உதட்டோரம் சிறு
கீற்றாய்  புன்னகை
உதிர்த்து விட்டு
அன்னையின் அணைப்பில்
அயர்ந்துறங்கிப் போகிறது
சிறு கிள்ளை !

Sunday, May 11, 2014

புன்னகை ஒன்றே போதுமே !




பொன்னும்  வேண்டாம்
பொருளும்  வேண்டாம்
அன்பு   நிறைந்த
வாய்  நிறைந்த
மனம்  நிறைந்த
புன்னகை  ஒன்றே போதும் -
அன்னையவள்  குதூகலிக்க !


பாராட்டுப்  பத்திரம்  வேண்டாம்
பகட்டான  பட்டும்  வேண்டாம்
பளபளக்கும்  பொன்னும்  வேண்டாம்
பசிக்காக  நாமழுத  போது
தன்  உதிரம்  அதையே
பாலாக்கி  கொடுத்தவள் மீது
பாசம்  கொண்டாலே  போதும் !


கரம் பற்றி  நடை  பயிற்றுவித்தவள்
நாம்  துவண்டு  விழுந்தபோது
கை கொடுத்து தூக்கி  விட்டு
நம்பிக்கையை  காலமெலாம்
துணையாக்கித்  தந்தவள்
கரங்களை  ஆசையுடன்
பற்றியிருந்தாலே  போதும் !


அன்னையர்தம்  ஆசியில்
ஆசையெலாம்  நிறைவேறும்
அன்னை  காட்டிய  அன்பினை
கற்றுத்  தந்த  பாசம் தனை
பிற  உயிர்கள் மீதும் காட்டினால்
அகிலமே  அழகாகும் ! - அன்பிலே
ஆனந்தமே  நிலையாகும் !


அன்னையர்   தின    நல்வாழ்த்துகள் !


Wednesday, May 7, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 6



காணும் புத்தகமெலாம் 
உன் அறிவுப் பசிக்கு 
அமுதூட்டும் அட்சய 
கலயமானதே !


நீ எழுதுகோல் பற்றி 
எழுதிய கோட்டுச் 
சித்திரமெலாம் எமக்கு 
பொக்கிஷமானதே !


குளிர்சாதன பெட்டி கணினி 
வீட்டுச் சுவர் - தொலைக்காட்சி 
அனைத்திலும் உன் 
எழிலார்ந்த கைவண்ணங்களே !


நீ செய்யும் சிறு சிறு 
உதவிகளில் எலாம் 
சொக்கிப் போய்  தான் 
நிற்கின்றேனே !


செய்யும் நற்காரியத்திற்கு 
கைத்தட்டலுடன் ஊக்கம் கேட்கும் 
உன் அழகு குணம்  தனை 
மெச்சுகிறேன் !


 உறங்கையில் நீ உதிர்க்கும் 
சிறு முறுவல் கண்டால் -
கண்ணிமையாது தான் 
காண  விழைகிறேன் !


என் கண்ணே உன் மீது 
பட்டுவிடுமோ என்று 
சடாரென 
திரும்பிக் கொள்கிறேன் !


என் மனநிலை அறிய 
முகத்தையும் கண்களையும் 
உற்று நீ நோக்குகையில் 
எனை மறந்து சிரிக்கின்றேன் !


உன் புன்னகையில் 
உலகையே  மறந்து நிற்கின்றேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு 
உன்னிலேயே என்னைத் தேடுகிறேன் !


என் கண்ணான கனியமுதே !!!



பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4
பிள்ளைக் கனியமுதே ! - 5

Friday, May 2, 2014

நட்பு முகம் காட்டுமா ?







ஒரு  காலத்தில்   நட்பால்
மனதினை களவு கொண்டு 
போயினர் - சிலர் ....
விரைந்தோடிய   காலமும் 
வரிசைகட்டி வந்த பொறுப்பும் 
நட்பினை மனதின்  ஓரத்தில் 
பதுக்கி  வைத்து விட 
எங்கிருந்தாலும் சுகந்தம் 
வீசும்  மலராய்  கனவில்  வந்து 
குதூகலமூட்டுது  - உளம்  கவர்ந்த 
நட்பு  !
கனவினில்  குதூகலம்  தந்த 
இனிய  நட்பு  - நிஜத்தில் 
முகம் காட்டுமா  ?

Friday, April 25, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 5


கண்ணாடி  தனைப்  பார்த்து 
நீ  சிரிக்க  - உனைப்  பார்த்து 
நான்   இரசிக்க   - எனைக்  கண்டதும் 
கையை  நீட்டியபடியே 
அழகுப் புன்னகை உதிர்க்கிறாயே !


கண்ணாடி  பிம்பம்  தனையே 
உனைப்  போல் மற்றோர் 
கிள்ளையெனக்  கருதி  - மெல்ல 
கண்ணாடியை  முன்னும்  பின்னும் 
திருப்பித்  தான்  பார்க்கிறாயே  !


கலைத்துப்   போட்டு  விளையாடிய 
செப்பை  எல்லாம்  -  நீ 
களைத்து  உறங்கியதும்  ஒழுங்காக்க 
எழுந்ததும்  முதல்  வேலையாய் 
கலைத்து  தான்  விடுகிறாயே !


காலை  எழுந்ததும்  என் 
முகம்  தேடும்  - உன்  ஆவல் 
விழிதனைக்   காணவே 
நீயே  உறக்கம்  கலைந்து 
எழும் வரை  காத்திருக்கிறேன்  !


உன்  ஒவ்வோர்  அசைவிலும்  தான் 
தளர்விலா முயற்சியை 
கண்டு  மகிழ்கிறேனே !
நீயே  எந்தன்  வாழ்வின் 
ஒளியாக   ஆனாயே !


என்   பிள்ளைக்  கனியமுதே !

  

பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4


Wednesday, April 23, 2014

கடல் - காதல்



தென்றலும் கலகலவென
எதிர்படுவோரை  எல்லாம்
நலம்  பாராட்டி
உபசரித்துச்  செல்ல

கடல் அலையெலாம்
சுற்றம்  தனை  வரவேற்று
பன்னீர்  தெளித்து - புது
உற்சாகம் ஊட்ட

வெண்பஞ்சு  மேகமெலாம்
கவின்மிகு  காட்சியில்
இலயித்துப் போய்
தமை மறந்து மிதக்க

கண்கொளாக்   காட்சியாய்
அரங்கேறுது - இங்கே
நீலவான் - நீலக்கடலின்
காதல்  சங்கமம் !
 
 

Tuesday, April 15, 2014

பிள்ளைக் கனியமுதே - 4



நீ  செய்யும் சிறுசிறு
உதவிகளில் எல்லாம்
சொக்கிப் போய் தான்
நிற்கிறேன் !

நற்காரியத்திற்கு கைதட்டலுடன்
ஊக்கம்   சேர்க்கும் உன்
அழகு  குணம் தனை
மெச்சுகிறேன் !

உறங்கும் போது நீ
உதிர்க்கும் சிறு முறுவலை
கண் இமையாது தான்
காண விழைகிறேன் !

என் கண்ணே பட்டு விட்டால்
என்ன செய்வேனென்றே
சடாரென பார்வையை
திருப்பிக் கொள்கிறேன் !

என் மனநிலை அறிய
முகம் நோக்கும் உன் 
குறுகுறு விழி கண்டு
எனை மறந்து சிரிக்கிறேன் !

உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கிறேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே எனை தேடுகிறேன் !

என் கண்ணான கனியமுதே !





பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2 
பிள்ளைக் கனியமுதே ! - 3

Monday, April 14, 2014

பிள்ளைக் கனியமுதே - 3


காணும்  புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலையமானதே ! 

புத்தகங்களை எல்லாம்
நீயே கிழித்து விட்ட போதும்
அவற்றை ஒருங்கிணைத்து நீ
ஓர் நாளும்  படிக்க மறந்ததிலையே !

நீ  எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எனக்கு
பொக்கிஷமானதே !

குளிர்சாதனப் பெட்டி
சுவர் - தொலைக்காட்சி கணினி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !

நீ உதிர்க்கும்  வார்த்தைகளுக்கு
பொருள் விளங்காது போயினும்
என் இதய பேழையில்
பொக்கிஷமென பாதுகாக்கிறேன் !

என் செல்லக் கண்மணியே !


பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2

Sunday, April 13, 2014

சித்திரையே வருகவே !


சித்திரையே  வருகவே
சீரும் சிறப்பும் பெருகவே

சிரிப்புடன் வருகவே
சிந்தையெலாம்  மகிழவே

சிறிது மழையுடன்  வருகவே
நானிலமும் குளிரவே

தனமும் தானியமும் கொழிக்கவே
தரணியெலாம் தழைத்தோங்கவே

நலமும் வளமும் நிறையவே
நல்வாழ்வு அனைவருக்கும் கிட்டவே

வருகவே ஜய  புத்தாண்டே
ஜெயம் பல தருகவே !


Friday, March 28, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 2

சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள்


கிண்ணமதில்  அன்னம்
ஏந்தி -  உன்  பவழ வாயில்
நான் ஊட்ட -மெல்ல
விரல் கடித்து  சிரிப்பாயே !


அன்னமும்  வெஞ்சனமும்
உன்  பிஞ்சுக்  விரல்களை
வண்ண மயமாக்கிட - தரையில்
எழுதிடுவாய்  எழில்  ஓவியம் !


அங்கீ .... அங்கீ ..... என்று  மழலை  பேச்சுடன்
குப்புற  விழுந்து  - மெல்ல தலைதூக்கி
நீ   சிரிக்க - கள்ளமிலா  சிரிப்பதில்
கொள்ளை போகுதே எம் உள்ளமே !


தரையில்  பரபரவென  நீந்தியே
கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து  நீ  உதிர்க்கும்
புன்னகைக்கு தான்  விலை மதிப்பில்லையே !


நீ  கண்களை இரு கரங்கொண்டு
மூடிக்  கொள்ள - நான்  "பிடிச்சா "
சொல்லிச்  சிரிக்க - என்  கண்களை
உன் பிஞ்சுக்  கரங்களால்  மறைத்திடுவாயே !


கண்  மறைத்த  சற்று  நேரத்திற்கெலாம்
கைகளை  விலக்கிப்  பார்த்து
கலகலவென   முன்னெட்டுப்  பற்கள்  தெரிய
சிரித்து   உலகையே  மறக்கச்  செய்திடுவாயே !


உன்   செல்லக்   குறும்புகளெலாம்
கட்டிக்   கரும்புகளாக  இனிக்கின்றனவே !
உனை   என்   மகவாய்   ஈன்றிட 
என்ன    தவம்   செய்தேனோ  !


உன்னால்   பிறவிப்  பயன் 
அடைந்தேனே  !  - என்  வாழ்வும்
இன்று   முழுமை  அடைந்ததே
உன்னாலே - என் கண்மனியே !







பிள்ளைக்  கனியமுதே ! - 1 


 

Friday, March 14, 2014

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள்

இந்த வாரம் கிராமத்துக் கருவாச்சி தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் பளப்பளன்னு சொலிக்கனுமா ??   என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 


 

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  கலை  அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

 

 

Wednesday, March 12, 2014

அழகு தேவதை



கள்ளமறியா  கிள்ளை  உன்னிடம்
காதுகள் விறைக்க - புயலென
துள்ளியோடும் முயல் குட்டியும்
களிப்புடனே கையசைத்து சொல்லும்
மகிழ்வான சேதி  என்னவோ ?
துளி அரவம்  கேட்டாலே
தாவி ஓடி ஒளிந்திடும்
பஞ்சுப் பொதி முயலும்
தயக்கம் சிறிதுமில்லாது 
அருகில்  நின்று   
அழகு தேவதை
உனை  இரசிக்கிறதோ ?



Saturday, March 8, 2014

பெண்மை உணர்ந்திடுவோம் !


பெண்ணெனவே புவிதனில்
பிறப்பெடுத்தோம் - பொன்னாய்
போற்றி பாதுகாக்கப் பட்டோம் !
இளவரசியாய் இன்பமாய்
அன்பு  மழையிலே
அலுக்காது நனைந்திட்டோம் !

திருமணம் என்ற வரம் வாங்க
பொன் கொட்டிக் கொடுத்த போதும்
புண்பட்டே துடித்திட்டோம் !
கொண்ட கடமை அனைத்தும்
கசடற நிறைவேற்றினாலும்
கருத்துரிமை கூட மறுக்கப்பட்டோம் !

கல்வி தனை துணை கொண்டோம்
கருத்துடனே செயல்பட்டோம்
ரௌத்திரம் பழக  மறந்திட்டோம் !
மென்மையான மலரேன்றே எண்ணி
மனிதம் சிறிதுமில்லாது கசக்கி
பந்தாடி பிய்த்து எறியப்பட்டோம் !

பெண் அழகுக்கு அடையாளமாகிறாள்
பெண் அன்புக்கு அடையாளமாகிறாள்
பெண் அமைதிக்கு அடையாளமாகிறாள்
பொங்கி எழும் அக்கினி குழம்புக்கு
பெண் அவள் அடையாளமாகும் முன்
உணர்ந்திடுவோம் !

பெண்ணும் உலகத்து உயிர்களைப் போல்
உணர்வுகள் தன்னுள் கொண்டவளென்று
இரத்தம் சதையினால் ஆனவளல்ல பெண் -
அன்பு பாசம் தியாகம் - இவற்றின் கலவையே
பெண் - உணர்ந்து காத்திடுவோம் ! அவர்தம்
உணர்வுகளை மதிப்போம் !


மகளிர் தின நல்வாழ்த்துகள் !!!

Thursday, March 6, 2014

பிள்ளைக் கனியமுதே ! -1


உன்னாலே ! உன்னாலே !!




விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !

விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !

மௌனத்தையே  தன்
மொழியென  கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !

விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !

மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !

மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !

Thursday, February 13, 2014

இளமை மாறாத காதல் (காதலர் தின கவிதை)







அந்தப்  பச்சரிசிப் 
பல்  சிரிப்பும்
குழி விழுந்த
சின்னக்  கண்ணும்
என் கண்ணை விட்டு
அகலாது - என்
கண்ணான கண்ணவளே !

நெருப்பது சுட்டெரிச்சாலும்
என்னைய  வெட்டி  எறிஞ்சாலும் 
நெஞ்சுல பூவா நிறைஞ்சிருக்க
உன்  நெனைப்பும் தான்
அது என்னென்னைக்கும் 
என்னை  விட்டுப் போகாது - என்
பொன்னான சின்னவளே !

கஞ்சிக் கலையத்தை தான்
நீ சுமந்து வாரையில
மனசுந் தான் துள்ளிக் குதிக்கும் !
பூத்து நிக்கற வேர்வைப் பூவுந்தான்
உன் முந்தானை பட்டதும்
வெக்கப்பட்டு  ஓடிப் போகும் - என்
செல்லம்மா பொண்ணவளே!

பழைய கஞ்சியும்
நேத்து வச்ச மீன் குழம்பும் தான்
அமுதமாகிப் போகுமே
உன் பட்டுக் கை பட்டாலே !
உழைச்சு ஓஞ்ச உடம்பும் தான்
உற்சாகமாகுமே - உன் அன்பாலே
என் கட்டித் தங்கமானவளே !

காலமெலாம் உனக்கு நானும்
எனக்கு நீயுந்தான் -
காலமது மாறினாலும்
கோலமது மாறினாலும்
என்றும் இளமை மாறாது
நாம கொண்ட அன்பு தான்
என் வாழ்வானவளே !


Tuesday, February 4, 2014

சுமப்பதெல்லாம் சுமையல்ல !!!



பட்டுப் பாதம் அது
சுடும் நெருப்புல தான்
பொத்துப் போயிடுமோ
இல்ல -
கொத்து  நெருஞ்சியும் தான்
பஞ்சு பாதத்தையே
பதம் பாத்துருமோ
இல்ல -
நடந்து நடந்து உன்
குட்டிக் காலுந்தான்
நோவெடுத்துப்  போகுமோ
இதையெல்லாம் நினைச்சாலே
மனசு பதைக்குது - என்
தங்கச்சி தங்கமே !
நானே உன்ன சுமக்கறேன்
என் முதுகுல உப்பு மூட்டையா !
சுமக்கிறதெல்லாம் சுமை
ஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு
அண்ணன் உன்னை
விரசா  கூட்டிப் போறேன்
என் குட்டித் தங்கமே !!!


Sunday, January 26, 2014

முதல் ஸ்பரிசம்



கனவினிலும் கற்பனையிலும்
உன் முகம் கண்டு
ஆயிரமாயிரம் கதைகள் பேசி
கொஞ்சி விளையாடி
புன்னகைத்து - பூரித்து
உன் வரவிற்காய்
தவமாய் தவமிருந்து
கருவினில் மெல்ல
துள்ளியும் - செல்லமாய்
பிஞ்சுக் கால்களால் உதைத்தும்
உன் ஒவ்வோர் சிறு
அசைவிலும்  அதிர்விலும்
இனிய நினைவுகளை ஏற்படுத்தி
உன் ஜனன மணித்துளிகள்
ஒவ்வொன்றும் - மரணத்திலும்
மறவா  உயிர்த்துளிகளாகிட
 உன் விரல்கள் தீண்டிய
மென்மையான ஸ்பரிசத்தால்
மகிழ்ச்சி  வெள்ளமதில்
இதயம் தத்தளிக்க - அதுவே
ஆனந்தமாய்  கண்ணீரென
வெளிப்பட - வார்த்தைகள்
ஒவ்வொன்றும் 
தொண்டைக் குழியின்
அடியாழத்தில் இருந்து
துள்ளி ஓடி வரத் துடிக்க
ஏதோ ஒரு விசை
அவற்றை மீண்டும்
உள்ளே தள்ளி அழுத்த
உன் இதழ் உதிர்த்த
சிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !
என் உயிர் தனில் நிறைந்திட்ட
உன் முதல் ஸ்பரிசத்தால் !!!!





Monday, January 13, 2014

பொங்குக பொங்கல் ! அன்பையும் அமைதியையும் அகிலமெலாம் பரப்பிட !!!



புது பானையில்
புது அரிசி -பனை
வெல்லம் கொண்டு
பொங்கலிட்டு -
மங்கள மஞ்சளும்
தித்திக்கும் செங்கரும்பும்
வாழ்வாதார ஆதவனுக்கு
படையலிட்டு -
ஏர் கலப்பையுடன்
கால்நடைகளையும்
நினைவில் கொண்டு
வாழ்த்தி வணங்கி
உதிரமதை வியர்வையாக்கி
விதைக்கு வியர்வையையே நீராக்கி
உலகுக்கே உணவு உடை வழங்கும்
உன்னத ஆத்மாக்களாம்
உழவர்களை எந்நாளும்
நினைவில் கொள்வோம் !
மனித வாழ்வுக்கு
விவசாயமே ஆதாரமென்பதை
நினைவில் நிறுத்தி
இயற்கையை காப்போம் !
இயற்கையின் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்வோம் !


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!



Saturday, January 11, 2014

தென்றல் !!!!

காதில் கிசுகிசுத்து விட்டு
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -

நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?

தலையசைத்தாடும்  மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !

தண்மையாய்  சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!

Related Posts Plugin for WordPress, Blogger...