Tuesday, October 15, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தென்றல் சசிகலா அவர்கள்

இந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி  சசிகலா அவர்கள்  அனுபவமும் பழமொழியும் !  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 





எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  தென்றல் சசிகலா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

Monday, October 14, 2013

ஓர் இளந்தென்றலின் ஏக்கம் !!



நளினமாய் வளைந்தாடி
தென்றலுடன் கவிபாடி
மெல்லிசை கீதங்களை
செவிகளுக்கு விருந்தாக்கி
காணும் கண்களுக்கு
எழில் காட்சியாகி
மனம் மையல் கொள்ளச் செய்த
இரத்தினக் கம்பளம் போர்த்திய
பெண்ணணங்கே !
நீ எங்கே ?


பாவனைகள்  பல காட்டி
நீ  நடனமாடிய
நில  மேடையில் - இன்று
கல்லும்  மண்ணும்
கட்டிடமாய் உயர்ந்து நிற்க
ஒவ்வோர் நாளும்
உன்னைத் தேடி ஓடிவரும்
தென்றலதுவும் - பலத்த
ஏமாற்றத்துடனே ஏங்கிப் போய்
திரும்பிச் செல்கிறது !


தென்றலும் தான்
ஏற்க மறுக்கின்றது !
உடன் விளையாட
நீ இல்லை என்ற உண்மையை !
அதனுடன் கைகோர்த்து
களிநடம் புரியவேனும்
மீண்டு வந்திட மாட்டாயோ
இரத்தினப் பட்டுடுத்தி
மலரும் மணியும் ஆபரணமாய் சூடும்
எழிலார்ந்த நிலமகளே !!!

நஞ்சான உயிர்வளி !




தண்மையைச்   சுமந்து   வரும்
மெல்ல  நம்   மனம்  தழுவும்
புத்துணர்வு  தனை  நம்முள் பரப்பி
புது  உற்சாகம்  நமை  ஆட்கொளச்  செயும்
இன்பமான  உயிர்வளி !!!
வாழ்வின் ஆதாரமாயும்
அவசியத் தேவையுமான  உயிர்வளி !
இன்றோ நஞ்சாய் ! –  ஏன் ? எதனால் ?
புகை ! புகை ! எங்கும்  புகை ! எதிலும்  புகை !
வாகனப் புகை ! தொழிற்சாலைப் புகை !
சிகரெட் புகை ! எரிக்கும்  குப்பையினால் புகை !
காற்று மண்டலமே  புகை மண்டலமாகிவிட
எங்கு தேடுவது தூய்மையான  உயிர்வளியை ?
காற்றைத் தூய்மைப் படுத்தி
நமக்கு உயிர்வளி வழங்கும் உத்தமர் அவர்தம்
உறவினை வெறுத்தோம் – சுயநலப்
பேயும் தான் மனதினை ஆட்கொள்ள
உலக உயிர்க்கெலாம்  அன்னையென
அடைக்கலமளித்து காக்கும்
மரங்களையும் வெட்டிக் குவித்தோம் !
நினைவில் இருத்திக்  கொள்வோம் –
இயற்கையை மதியாது  உதறிவிட்டு
செயற்கைக்கு வரவேற்பளிக்கிறோம் ! 
நமக்கு நாமே - நம்மை அறியாது
சூன்யம் வைத்துக் கொள்கிறோம் !
நாம் உயிர்  வாழ உயிர்வாயுதனை
கலன்களில் அடைத்து
முதுகினில் சுமந்து  திரியும்
காலமதுவும் வெகுதொலைவிலில்லை !!!
மரங்களைக் காத்து தூய்மையான  உயிர்வளிக்கு
வழிவகை செய்தால் – வாழலாம் நலமுடன் !!
இல்லையேல் – அருகிவரும் இனமதில்
மானுடம் சேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை !!!
Related Posts Plugin for WordPress, Blogger...