Tuesday, July 30, 2013

தென்றல்....



உயரமாய் வளர்ந்து
நிமிர்ந்து  நிற்கும்   மூங்கிலதில்
வளைந்து  நெளிந்தாடி
வருடும் தென்றல் - ஒலிக்கும்
சிந்தைகவர் வேணுகானமாய் !!!


வளைந்து  நிமிர்ந்த   நாணல்
வண்ண  முத்திரைகள்  காட்டி
வதனமதில் புன்னகை பூட்டி
கானமிசைக்கும்  தென்றலுக்கு ஏற்ப
ஆடும் எழில் நர்த்தனமாய் !!!


புத்தம் புதிதாய்  அலர்ந்து
எழில்  வண்ணம்  சூடி
சிந்தை தனைக்  கவர்ந்து
புன்னகை  உதிர்க்கும்  மலர்தனில்
தென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் !!!


சிந்திய  சருகுகள் தனை
சற்றே  தொட்டுச் சென்று
சிரித்தோடி விளையாடும்
சின்னஞ்சிறு  தென்றல் -
சலசலக்கும் சலங்கை ஒலியாய் !!!


நாசிதனில்  நுழையும் தென்றலது
தால்  மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்
உளம்தனை  உருக்கி
உயிர்தனை  வருடும்
இனிய மெல்லிசையாய் !!!


மேகக் காதலனோடு கிசுகிசுக்கும்
மரமாகிய பெண்ணவளுக்கு
காதல் நாயகனின் பரிசாம்
மழை முத்தங்களை  தென்றலது
பத்திரமாய் முத்திரையெனச்  சேர்க்கும் !!!


Wednesday, July 17, 2013

சகோதர மனம் !



கரம் பற்றி
கதைகள் பல  பேசியும்
சண்டையும் சச்சரவும்
வந்த நொடியில் மறைந்து
மறந்தும் போய் விட
கண்மணி தங்கை அவளின்
கண்களும் அகல  விரிய
ஆசையுடன் பார்க்கும்
சிறுகிள்ளை அவளுக்கு
அன்பையெல்லாம் வாரிச் சேர்த்து
சிறு முத்தமொன்றை
பரிசாய்த் தந்து
ஆவலுடன்  ஓடி வரும்
உடன்பிறப்பின் கை பற்றி
ஆர்வத்துடன் கற்றுத் தந்து
கள்ளமில்லா புன்னகை அதுவும்
பரிசாய்க் கிடைத்திட 
அவள்தம் மகிழ்ச்சியும் வெற்றியுமே
பெரிதாய்த் தோன்றிட
வாழ்வில் வளமனைத்தும்
அவளது காலடியில் சேர்ந்திட
வேண்டிடும் - சகோதர மனம் !
 



Related Posts Plugin for WordPress, Blogger...