Thursday, January 10, 2013

தைமகளே வருக !!!


வெட்கத்தால் நாணி நிற்கும்
தையலென - நெற்கதிர் அனைத்தும்
கதிரவனின் ஒளிதனில் முகம் சிவந்து
தலை சாய்த்து - நெல்மணி பற்கள்
தெரிய புன்னகைக்க
வருக தைமகளே !!! வளம் தருகவே !!!

தித்திப்பான திங்களின் வரவினை
எண்ணி எண்ணி - தன்
ஒற்றைக் காலில் தவமிருக்கும் ஞானியாய்
கரும்பும் தன் தோகைக்
கரம் குவித்து காத்திருக்க
வருக தைமகளே !!! இன்பம் பல தருகவே !!!

மங்களம் எங்கும் நிறைந்திருக்க
மஞ்சளும் பொன்னென தகதகக்க
பூமித்தாய் காத்த புதுப் பெண்ணாய்
பொங்கலன்று முகம் காட்டி
வசந்தமென உன்னை வரவேற்கிறாள் -
வருக தைமகளே !!! வாசம் தருகவே !!!

இல்லாமை மறைந்து
உலகெல்லாம் பசி மறந்து
இன்பமயமாய் வாழ்ந்திட
ஆதவனின் அருளால்
அன்பும் பண்பும் நிறைந்திட
தைமகளே வருக !!! வருகவே !!! 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...